ராம நவமி பண்டிகையின் போது ஏற்பட்ட பதற்றம் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள பீகாரின் சசரம் சுற்றுப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரத்து செய்துள்ளார்.
பாஜகவின் மாநில தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பீகார் மாநில பாஜக தலைவர் சாம்ராட் சௌத்ரி, “ பீகாருக்கு வருகைதரும் அமித் ஷா இன்று மாலை பாட்னாவுக்குச் செல்வார், ஞாயிற்றுக்கிழமை நவாடா மக்களவைத் தொகுதியில் கட்சித் தொண்டர்களிடம் திட்டமிட்டபடி பேசுவார். ஆனால், ராம நவமி பண்டிகையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், பேரரசர் அசோகரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சசரம் பகுதியில் அமித் ஷா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. நிதிஷ் குமார் நிர்வாகத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. முதலமைச்சரின் சொந்த மாவட்டமான நாளந்தாவில் உள்ள பீகார் ஷெரீப் கூட கொந்தளிப்பில் உள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளும் கொந்தளிப்பில் உள்ளன" என்று குற்றம் சாட்டினார்
இது தொடர்பாகப் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், தேவைக்கேற்ப கூடுதல் படைகளை வழங்குவதாகக் கூறி மாநில அரசை அணுகினோம், ஆனால் ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரமும் தூக்க நிலையில் இருப்பதாகத் தெரிகிறது என்று கூறினார்.
நிதிஷ் குமார் கடந்த ஆண்டு பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ஆர்ஜேடி, காங்கிரஸ் அடங்கிய மகாகந்பந்தன் கூட்டணியில் இணைந்து மீண்டும் பீகார் முதல்வரானார். அதனைத் தொடர்ந்து அமித் ஷா பீகாரில் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 2019ம் ஆண்டில் பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் பாஜக, ஜேடியு, எல்ஜேபி கூட்டணி கைப்பற்றியது. எனவே 2024 தேர்தலில் அதே அளவு வெற்றிபெற பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது.