அதெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது: டி.ஆர்.பாலு நோட்டீசுக்கு அண்ணாமலை அனுப்பிய பதில்!

அண்ணாமலை
அண்ணாமலைஅதெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது: டி.ஆர்.பாலு நோட்டீசுக்கு அண்ணாமலை அனுப்பிய பதில்!

மன்னிப்பு கேட்க முடியாது, இழப்பீடும் தர முடியாது. இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளதாக டி.ஆர்.பாலு நோட்டீசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள் பல கோடி ரூபாய்க்கு சொத்துகளைக் குவித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வீடியோ வெளியிட்டார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் தரப்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை கூறியதற்காக அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.50 கோடி முதல் ரூ.500 கோடி வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸ் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், டி.ஆர்.பாலு அனுப்பிய நோட்டீசுக்கு வழக்கறிஞர் பால் கனகராஜ் மூலம் அண்ணாமலை பதில் அனுப்பி உள்ளார். " அதில், திமுக நிர்வாகிகளின் சொத்துப்பட்டியலை ஆதாரங்களுடன் தான் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். திமுகவினரின் சொத்து விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் அண்ணாமலை இதை வெளியிட்டுள்ளார்.

யாரையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதை அவர் வெளியிடவில்லை. எனவே, அவதூறு சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. டி.ஆர்.பாலு பல நிறுவனங்களில் இயக்குநராக இருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அதேபோன்று, பல நிறுவனங்களில் அவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பங்குகள் இருப்பதற்கும் ஆவணங்கள் உள்ளன. உரிய ஆதாரங்களுடன் தான் டி.ஆர்.பாலு மீது அண்ணாமலை குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

எனவே, மன்னிப்பு கேட்க முடியாது, இழப்பீடும் தர முடியாது. அண்ணாமலை இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in