இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!- நீட் விவகாரத்தில் முக்கிய முடிவு

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குகோரும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டப்பேரவை அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்ட மசோதா சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்டது. பின்னர் மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் முதல்வர், இரண்டு முறை ஆளுநரை சந்தித்து மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், கடந்த 3-ம் தேதி நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திடீரென திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த முடிவு, தமிழக மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக, சட்டப்பேரவை அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய 12 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். பா.ஜ.க. இந்தக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது.

கூட்டத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துகளை முன்வைத்துப் பேசுகிறார்கள். அதன்பிறகு, நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்றுவது குறித்தும், அதற்கான தேதி குறித்தும் முடிவுசெய்து அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in