
இப்போது ஜாதி வாரி கணக்கெடுப்பை ஆதரித்து பேசுபவர்கள், நாடு சுதந்திரம் அடைந்தபோது அந்த கோரிக்கையை தடுத்து நிறுத்தியவர்கள் தான் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், மத்தியபிரதேச மாநிலம் சட்னாவில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்தியா கூட்டணிக்குள் இடம் பெற்றிருக்கிற சமாஜ்வாடி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் மத்திய பிரதேசத்தில் எதிரெதிராக நின்று போட்டியிடுகின்றன. இந்த நிலையில் ராகுல் காந்தியை தனது பிரச்சாரத்தின்போது அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
"ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மக்களின் 'எக்ஸ்ரே' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அவரது கருத்து விநோதமாக இருக்கிறது. 'எக்ஸ்ரே' என்பது அந்தக் காலத்தில் தேவைப்பட்டது. தற்போது எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் வசதிகள் வந்துவிட்டன. தற்போது சமூகத்தில் பலவித நோய் பரவிவிட்டது. இந்தப் பிரச்சினையை அப்போதே தீர்த்திருந்தால், இவ்வளவு இடைவெளி இருந்திருக்காது.
'எக்ஸ் ரே' பற்றி பேசுபவர்கள், நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தடுத்து நிறுத்தியவர்கள் தான் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் தற்போது காங்கிரஸ் இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ளதற்கு முக்கிய காரணம், அவர்களின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது. தங்களிடம் வாக்கு சதவீதம் இல்லை என்பதும் அவர்களுக்கு நன்றாக தெரியும்" என்று அவர் பேசினார்.
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலின் போதே இவ்வளவு கருத்து வேற்றுமைகள், குழப்பங்கள், மோதல்கள் ஏற்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலின்போது எவ்வளவு ஏற்படுமோ என்ற ஐயம் இந்தியா கூட்டணி தலைவர்களிடையே எழுந்துள்ளது.