ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் இதுதான்! - வெளியானது எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை

ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் இதுதான்! - வெளியானது எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எய்ம்ஸ் மருத்துவக்குழு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் அடங்கிய எய்ம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆறுமுகசாமி ஆணையத்தில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களின் ஆவணங்களையும், அப்போலோ மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கைகள் என அனைத்தையும் ஆய்வு செய்தனர். இதன் மூலமாக ஆணையத்தில் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ள இறுதி முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக நீரழிவு, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது உள்பட பல்வேறு பிரச்சினைகள் அவருக்கு இருந்துள்ளது. அதற்குச் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், ஜெயலலிதா மருத்துவமனையிலிருந்த போது திராட்சை, கேக், இனிப்புகளையும் சாப்பிட்டுள்ளார்.

20.09.2016 அன்று இரவு 10 மணிக்கு ஆம்புலன்ஸ் கேட்டு ஜெயலலிதா இல்லத்திலிருந்து தொடர்பு கொண்டதாகவும், அப்போது இருந்த உடல்நிலை பார்த்து, முதற்கட்ட சிகிச்சை அளித்து மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு இன்சுலின் உள்பட நோய் தன்மைக்கு ஏற்ப மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக பேஸ்மேக்கர் கருவியும் ஜெயலலிதாவிற்குப் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்பட அப்பல்லோ சிறப்பு மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவக் குழுவினரும் சிசிக்சை அளித்து வந்தனர். டிசம்பர் 3 ம் தேதி ஜெயலலிதா உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 4 ம் தேதி மூச்சுவிடுவதற்கு பெரும் சிரமப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இதயம் செயலிழந்ததால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் அவரின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 5 ம் தேதி உரிய மருத்துவ நடைமுறைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் உடலைப் பரிசோதித்து மூளை மற்றும் இதயம் செயலிழந்தது என்பதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 5 ம் தேதி 11.30 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்றும், உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. கட்டுப்படுத்தமுடியாத அளவிற்கான நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், பாக்டீரியா ரத்தத்தில் பரவி இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 23 ம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in