ஓபிஎஸ்
ஓபிஎஸ்

அதிமுக பொதுக்குழு விவகாரம்! உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தங்களை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக பொதுக்குழு மற்றும் தீர்மானங்களுக்கு தடை விதி மறுத்துவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு கடந்த மாதம் 25ம் தேதி அளித்த தீர்ப்பில், உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானத்துக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் இன்று மாலை மேல்முறையீடு செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டால் தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in