வருமானத்துக்கு அதிகமாக 315 சதவீதம் சொத்து சேர்த்த வழக்கில் நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி.வேலுமணி, வீரமணி, அன்பழகன், விஜயபாஸ்கர் உள்பட பல்வேறு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் இதுவரைக்கும் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அதே நேரத்தில் அதிமுகவினரின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வகையில் நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லில் 24 இடங்களிலும், மதுரை, திருப்பூரில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடந்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினராக பாஸ்கர் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 4.72 கோடி மதிப்பிலான சொத்துகளை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் வருமானத்துக்கு அதிகமாக 315 சதவீதம் சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. அதிமுகவினர் மீது தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையில் சோதனை நடத்தி வருவது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.