
’’தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை அதிமுக ரசிக்கவில்லை. அவர்களின் வளர்ச்சியை நாங்கள் தடுத்து நிறுத்துவதாக அவர்கள் நினைக்கிறார்கள் என்பது கவலையாக உள்ளது’’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் டெல்லி புறப்பட்டார். டெல்லி புறப்படுவதற்கு முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘’தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட நாட்களாக அரசியலில் உள்ளார். இருந்தாலும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவிக்கும் 18, 19 வயது சிறுவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நடந்தாலும் அதில் காவல்துறை கவனம் செலுத்தவில்லை. கொலை, கொள்ளை சம்பவங்கள் குறையவில்லை. இன்னும் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களை கண்காணிப்பதை மட்டுமே காவல்துறை குறியாக உள்ளது.
சில உள்கட்சி விவகாரங்களை வெளியே பேசுவது அழகல்ல. நேரமும் காலமும் வரும்போது வெளியே பேசுவேன். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை அதிமுக ரசிக்க வில்லை என நினைக்கிறேன். அரசியலில் நிரந்தர நண்பரும், நிரந்தர எதிரியும் கிடையாது. தனித்துப் போட்டியிடுவது குறித்து நேரமும் காலமும் வரும் போது பேசுவேன். தமிழக அரசியலில் அண்ணாமலையை எதிர்க்க இவ்வளவு பேரா? கூட்டணி கட்சி தலைவர்கள் என்னை விமர்சனம் செய்வதை நான் வரவேற்கிறேன்.
அதிமுகவின் வளர்ச்சியை நாங்கள் நிறுத்துகிறோம் என அவர்கள் நினைக்கிறார்களோ என்ற கவலை எனக்கு உள்ளது. அது தவறு கிடையாது’’ என்றார்.
இன்று டெல்லி செல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.