அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்களின் மனுக்கள் தள்ளுபடி

தங்கள் வெற்றியை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்களின் மனுக்கள் தள்ளுபடி

தங்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மற்றும் தென்காசி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பழனி நாடார் ஆகியோர் தாக்க்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து, திமுக சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே.கே.சி.பாலு (14507 வாக்குகள் வித்தியாசம்) தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவில் குறைபாடுகள் இருந்ததை சுட்டிக்காட்டியும், அவற்றை நிவர்த்தி செய்யாமல் தேர்தல் நடத்தப்பட்டதாகவும், வாக்கு எண்ணிக்கையிலும் குளறுபடிகள் இருந்ததாகவும், 81 இயந்திரங்களில் குறைபாடுகள் உள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

இதேபோல தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.பழனி நாடார் வெற்றியை எதிர்த்து, அதிமுக சார்பில் போட்டியிட்டு 370 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளதாகவும், குறிப்பாக தபால் வாக்குகளையும் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த வேண்டுமென கோரியிருந்தார்.

இந்த தேர்தல் வழக்குகள் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணையில் உள்ளன. தங்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை ரத்து செய்யக்கோரி பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமாரும், தென்காசி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பழனி நாடாரும் தனித்தனியாக நிராகரிப்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து இருவருக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in