அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு ஆபத்து: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் பகீர் புகார்

அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு ஆபத்து: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் பகீர் புகார்

தமிழக அமைச்சர் சேகர்பாபுவால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிவித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞரான ஆறுமுகம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

சென்னை மண்ணடியை சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞரான ஆறுமுகம், திமுக அமைச்சர் சேகர்பாபுவால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிவித்தும், போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை அளித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் குறித்து அவதூறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டிய வழக்கில் உடந்தையாக இருந்ததாக போலீஸார் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும், இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்று காவல் நிலையத்தில் கையெழுத்திட உள்ளதாகவும் கூறினார். ஏற்கனவே ஒரு விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு மீது வழக்குபதிவு செய்ய தான் காரணமாக இருந்ததாலும், சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதாலும் சேகர்பாபுவுக்கு தன் மீது முன் விரோதம் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் சேகர்பாபுவின் தூண்டுதலின் பேரில் கடந்த 30ம் தேதி தான் கோவிலுக்கு சென்ற போது துறைமுக கிழக்கு பகுதி செயலாளர் ராஜசேகர் தலைமையில் குண்டர்களை ஏவி கொலை வெறி தாக்குதல் நடத்த அனுப்பியதாகவும், இதனால் பயந்து தான் அர்ச்சகர் வீட்டில் ஒளிந்து கொண்டதாகவும் அவர் கூறினார். பின்னர் அங்கு வந்த ராயபுரம் உதவி ஆணையர் லட்சுமணன் தன்னை பத்திரமாக காப்பாற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்..

எனவே அமைச்சர் சேகர்பாபுவால் எந்த நேரத்திலும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் போலீஸார் தகுந்த பாதுகாப்பு வழங்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in