'இது ஒரு தலைவருக்கு தகுதியா?'... அண்ணாமலையை விளாசிய எஸ்.பி.வேலுமணி!

பூத் கமிட்டி கூட்டம்
பூத் கமிட்டி கூட்டம்

எடப்பாடி பழனிசாமி சொல்வதை நாங்கள் செய்வோம் என்றும் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமையும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். அத்துடன், எடப்பாடி பழனிசாமி கருத்தே எங்களது ஒட்டுமொத்த கருத்து எனவும் உறுதிபட அவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில் “எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெல்லும். அதிமுக கூட்டணியில் யார் அங்கம் வகித்தாலும் அவர்கள் செல்லும் நோட்டு, டாலர் நோட்டு. கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்கள் கிழிந்த இத்துப்போன செல்லாத நோட்டு” என்றார்.

இதையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “திமுக ஆட்சி போக வேண்டும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர்- மதுரை மாநாட்டிற்கு செல்ல உணவு கூட வேண்டாம், வண்டி தயார் செய்து தந்தால் போதும் என கூறி தொண்டர்கள் எழுச்சியுடன் வந்தனர். திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்த மக்களும் நன்றாக இல்லை. மதுரை மாநாட்டைப் பார்த்து திமுகவினர் பயந்து விட்டனர். அத்துடன் திமுக ஆட்சி போய்விடும் என காவல்துறையினர் பயந்து விட்டனர்" என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், "மதுரை மாநாட்டை பற்றி தெரியாமல், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை படிக்காமல் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். கட்சிக்காக உழைக்காமல் உதயநிதி ஸ்டாலின் பதவிக்கு வந்து பெரிய தலைவராகி விட்டார். அண்ணா ஏழைகளுக்காக ஆரம்பித்த கட்சி இன்று குடும்ப சொத்தாக மாறி விட்டது. எங்களுக்கு ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். எனவே அவரது கருத்தே எங்களது கருத்து.

வேலுமணி, தங்கமணி பாஜக பற்றி பேசவில்லை என சிலர் சொல்லும் வேளையில் எங்களுக்கு எதிரி திமுக தான். இருந்தாலும் கூட்டணிக்காக நாங்கள் தன்மானத்தை விட்டு தரமாட்டோம்" என்றும் குறிப்பிட்டார்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

மேலும், " அண்ணாமலை கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பேச கூடாது. ஜெயலலிதா பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை. அண்ணா பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. பெரியார் வந்த பின்னர் தான் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்து. அண்ணா மன்னிப்பு கேட்டதாக உண்மைக்குப் புறம்பான விஷயங்களை அண்ணாமலை பேசியிருக்கக் கூடாது. இது ஒரு தலைவருக்கு தகுதியல்ல. அண்ணாமலை உண்மைக்குப் புறம்பாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எடப்பாடி பழனிசாமி கிணற்றில் குதிக்கச் சொன்னாலும் குதிப்போம். எனவே, எங்களுக்குள் சிண்டு முடியும் வேலையை திமுகவினரும், சில பாஜகவினரும் செய்கின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி தான் 40 தொகுதிகளிலும் வெல்லும் எனவும் தெரிவித்தார்.

நமக்குள் இருப்பது குடும்ப சண்டை தான் என்பதால் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும்” என்றார்.

ஆலோசனை கூட்டத்தில் பேசும் வேலுமணி
ஆலோசனை கூட்டத்தில் பேசும் வேலுமணி

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி. வேலுமணி, “அதிமுக தேர்தலுக்கு தயாராகி வருகிறது. திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் வராமல் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்களும் முதலமைச்சராக எடப்பாடி வர வேண்டும் என நினைக்கின்ற நிலையில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். எல்லா பிரச்சினைகள் பற்றியும் அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் தெளிவாக பேசி விட்டார். எதிர்கட்சி தலைவராக சிறப்பாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்.

அண்ணா பற்றி அண்ணாமலை பேசியதற்கு சி‌.வி.சண்முகம் எதிர்வினை ஆற்றினார். எடப்பாடி பழனிசாமி சொல்வதை நாங்கள் செய்வோம் . ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமையும். எடப்பாடி பழனிசாமி கருத்தே எங்களது ஒட்டுமொத்த கருத்து” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in