
அதிமுகவில் அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 75 ஆக இருந்த மாவட்டங்கள் 82 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக பெண் மாவட்டச் செயலாளராக போளூர் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயசுதா நியமிக்கப்பட்டுள்ளது அனைவரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் கழக அமைப்பு ரீதிகாக மாவட்டங்கள் 82 ஆக பிரிக்கப்பட்டு, தஞ்சை, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதில் அனைவரது கவனத்தை போளூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஜெயசுதா லட்சுமிகாந்தன் நியமிக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவில் வசந்தி முருகேசன் மட்டுமே பெண் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரும் 6 மாதத்தில் மாற்றப்பட்டார். இந்த நிலையில் அதிமுகவின் இரண்டாவது பெண் மாவட்டச் செயலாளராக ஜெயசுதா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் போளூர் தெற்கு ஒன்றிய செயலாளராக ஜெயசுதா நியமிக்கப்பட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது போளூர் தொகுதிக்காக போராடினார். ஆனால் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொகுதி மாறி போளூர் தொகுதி வேண்டுமென அடம்பிடித்ததால் ஜெயசுதாவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
ஆனால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தோற்றுவிடுவார் என கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் அவர் வெற்றிப் பெற்றார். அவரின் வெற்றிக்கு ஜெயசுதாவின் பங்கு அதிகம் என அப்போதே அதிமுகவினர் பரவலாக பேசினர். இந்த நிலையில் தான் ஜெயசுதாவிற்கு திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பை எடப்பாடி வழங்கியுள்ளார்.
மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து ஜெயசுதாவிடம் பேசினோம். ‘’எடப்பாடியார் தலைமையில் அதிமுக வலுவான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அவர் செய்த நல்லவைகளை மக்கள் இன்றளவும் மறக்கவில்லை. அதனால் வரக் கூடிய தேர்தல் எளிமையாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை சவால்கள் கிடையாது. இரண்டு தொகுதிகளில் வெற்றி நிச்சயம். எடப்பாடியாருக்கு காணிக்கையாக்குவேன்’’ என புன்னகைத்தார்.