பொதுக்குழு நாளில் தீர்ப்பு… சென்னை உயர்நீதிமன்றம் வைத்த செக்: பதற்றத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ்

பொதுக்குழு நாளில் தீர்ப்பு… சென்னை உயர்நீதிமன்றம் வைத்த செக்: பதற்றத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ்

அதிமுக பொதுக்குழுவிற்குத் தடைவிதிக்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று இருதரப்பினரும் காரசாரமான வாதங்களை முன்வைத்தனர். வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில், ஜூலை 11-ம் தேதி காலை 9 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய நிலையில் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனால் பொதுக்குழு நடைபெறாமலேயே போனது. இந்நிலையில் மீண்டும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் எனத் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இந்நிலையில் பொதுக்குழுவிற்குத் தடை விதிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஓபிஎஸ். இது குறித்து நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “பொதுக்குழுக் கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் ஜூலை 11-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் தொடர்பாகக் கடந்த திங்கட் கிழமை மாலைதான் எனக்குத் தகவல் கிடைத்தது. உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

நேற்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா, பொதுக்குழுவை நடத்தும் அதிகாரம் யாருக்கு உள்ளது. எத்தனை நாளுக்குள் அறிவிப்பு அனுப்ப வேண்டும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஈபிஎஸ் தரப்பினருக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கின் விசாரணை தொடர்ந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், ”அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களில் கோர்ட் தலையிட முடியாது. அதிமுக பொதுக்குழு வரைவு நிகழ்ச்சிகளுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் தரவில்லை. தற்போது வெளியிடப்படும் வரைவு நிகழ்ச்சிகள் யாவும் கட்சி அலுவலகத்தில் கொடுக்கப்பட்டவை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகவில்லை. கட்சி விதிகளைத் திருத்தம் செய்யத் தொண்டர்களை அழைக்கும் உரிமை பொதுக்குழுவிற்கு உண்டு. பொதுக்குழுவை நடத்தத் தடையில்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது” என கூறப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், “கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வைக்கப்பட்ட வாதம் தவறானது. கட்சி விதிகளில் திருத்தம் செய்த தீர்மானத்தை முன்வைக்காத நிலையில் கட்சி பதவிகள் எப்படி காலியாகும்? கட்சியின் நலன் கருதியே வழக்கு தொடரப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஜூலை 11-ம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார். அன்று காலையில்தான் பொதுக்குழு நடைபெற உள்ளதால் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருதரப்பிலும் பதற்றம் தொடர்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in