சசிகலா
சசிகலாஅதிமுக பொதுச்செயலாளர் பதவி: உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்

அதிமுக பொதுச்செயலாளர் பதவி: உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்

அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2016 டிச. 29-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், டி.டி.வி.தினகரன் துணைப்பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு அனுப்பப்பட்டதையடுத்து, 2017 செப்டம்பரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் கட்சியில் இருந்து நீக்கி, பொதுச் செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கப்பட்டது.

இதை எதிர்த்து சசிகலா, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை ஏற்று சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்தார். அவரின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதில் குளறுபடிகள் உள்ளது என்றும் செம்மலை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், செம்மலை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இதற்கிடையில் இந்த உத்தரவுக்கு எதிராக யாராவது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி சசிகலா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தற்போது கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in