அதிமுக பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ளன: உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வாதம்

அதிமுக பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ளன: உச்ச நீதிமன்றத்தில்  அதிமுக வாதம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ளன என உச்ச நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அதிமுக பொதுக்குழு தொடர்பான அப்பீ்ல் மனு, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் ஏற்கெனவே முடிவடைந்த நிலையில் இன்று அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் தனது வாதத்தை துவங்கினார். இன்று நண்பகல் 2 மணிக்கு துவங்கிய வழக்கு விசாரணை மாலை 4 மணி வரை நீடித்தது.

அதிமுக தரப்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம், "அதிமுக அடிப்படை கட்டமைப்பை சிதைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதால் கட்சி முடங்கும் நிலை வந்ததால் ஓபிஎஸ் அதிமுக பொதுக்குழுவால் நீக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களின் பதவிகள் காலாவதியாவதால் மற்ற பதவிகளும் தானாக ரத்தாகிவிடும் என்பது தவறு. பொதுக்குழு என்பது அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் ஆனது. எனவே, அது எடுக்கும் முடிவு அடிப்படை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவாகும். விதி எண் 5 படி அதிமுக பொதுக்குழுவின் முடிவே இறுதியானதாகும். இதுவே அதிமுகவின் அடிப்படை சட்டம்.

விதி எண் 19 படி பொதுக்குழுவே உயர் அமைப்பாகும். விதி எண் 43-ன் படி அதிமுக கட்சி விதிகளை திருத்தவும், நீக்கவும்., உருவாக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு.

மேலும், மொத்தம் 2460 உறுப்பினர்கள் ஆதரவுடன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் ஆணையத்திலும் இவர்களின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. நோட்டீஸ் கொடுக்கவில்லை என மனுதாரர் கூறவில்லை.ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் கையெழுத்திடவில்லை என்பதே அவர்களது வாதம். எனவே, நோட்டீஸ் வழங்கப்பட்டுவிட்டது என்றே கொள்ள வேண்டும். பொதுக்குழுவால் 5ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அதே பொதுக்குழு அப்பதவிகளை ரத்து செய்தபின் ஒருங்கிப்பாளராக தான் தொடர்வதாக ஓபிஎஸ் கூற முடியாது.

ஒருங்கிணைப்பாளர்கள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று 1.12.21 அன்று செயற்குழுவால் தீர்மானம் நிறைவேற்றபட்ட போது இத் தீர்மானம் பொதுக்குழுவால் கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் 23 ஜூன் பொதுக்குழுவால் இத்தீர்மானம் அங்கீகரிக்கப்படாததால் அப்பதவிகள் காலாவதியாகி விட்டன. எனவே, ஜூன் 11 அன்று நடந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டு மனுதாரர் தனது தரப்பு பலத்தை காட்டலாம் என தனி நீதிபதி தெரிவித்தார். இந்த நிலையில் மனுதாரர் பொதுக்குழுவுக்கு செல்லாமல் கட்சி அலுவலகத்திற்கு சென்று அலுவலகத்தை அடித்து நொறுக்கியதால் பொதுக்குழுவால் நீக்கப்பட்டார்" என்று வாதிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு ஒத்திவைத்தனர். மூத்த வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், முகுல் ரோஹத்கி, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அதிமுக சார்பில் நாளை வாதாட உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in