அதிமுக பொதுக்குழுவிற்கு தடைகோரும் வழக்கு: முன்கூட்டியே விசாரிக்கிறது கோர்ட்!

அதிமுக பொதுக்குழுவிற்கு தடைகோரும் வழக்கு: முன்கூட்டியே விசாரிக்கிறது கோர்ட்!

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை முன் கூட்டி விசாரிக்க வேண்டுமென்ற மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை விசாரிக்க உள்ளது.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டியைச் சேர்ந்த எஸ்.சூரியமூர்த்தி என்பவர் அதிமுக உறுப்பினர் எனக்கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், 2017-ல் கட்சியின் விதிகளுக்கு முரணாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதை ஏற்றுக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு உரிமையில்லை என குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்று எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த மனு நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்தபோது சூரியமூர்த்தி மனுவை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாள எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து நிராகரிப்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து வழக்கு ஜூலை 22-ம் தேதி தள்ளி வைக்கப்பட்டதால், வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என சூரியமூர்த்தி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜூன் 23-ம் தேதி பொதுக்குழு நடைபெற இருப்பதால், தன்னுடைய வழக்கை விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த வழக்கை வரும் திங்கட்கிழமை (ஜூன் 20) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in