`சும்மா கோடநாடு வழக்கை வைத்து பூச்சாண்டி காட்டவேண்டாம்'- ஆர்.எஸ்.பாரதிக்கு ஜெயக்குமார் பதிலடி

`சும்மா கோடநாடு வழக்கை வைத்து பூச்சாண்டி காட்டவேண்டாம்'- ஆர்.எஸ்.பாரதிக்கு ஜெயக்குமார் பதிலடி

"சும்மா கோடநாடு வழக்கை வைத்து பூச்சாண்டி காட்டவேண்டாம்" என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தை 4 முதல்வர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்தை பற்றி கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதற்கு பதிலடி கொடுத்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் பினாமி விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவரின் உண்மைகள் வெளிவரும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், " ஆர்.எஸ்.பாரதி வார்த்தைகளை அளந்து பேச வேணடும். நீங்கள் ஒரு வார்த்தை பேசினால் நாங்கள் 100 வார்த்தை பேசுவோம். அரசியல் ரீதியாக வந்து விமர்சனம் செய்யுங்கள் நாங்கள் பதில் கொடுக்கிறோம். முதல்வர் ஸ்டாலினை திருப்திப்படுத்தி பதவி வாங்குவதற்கு நாங்கள்தான் கிடைத்தோமா? அதிமுகவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் களங்கம் ஏற்படுத்தும் விஷயத்தில் ஈடுபட்டால் தகுந்த பதிலடி கொடுப்போம்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "கோடநாடு வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்றும் சும்மா கோடநாடு வழக்கை பயன்படுத்தி பூச்சாண்டி காட்டவேண்டாம் என்றும் இதற்கு பயப்படும் கட்சி அதிமுக அல்ல என்றும் சாடினார் ஜெயக்குமார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in