
பரமக்குடி பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த மாதம் 9-ம் வகுப்பு பள்ளி மாணவி காரில் கடத்தி செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதிமுக கவுன்சிலரும், ரியல் எஸ்டேட் அதிபருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை மாநில தலைவர் புதுமலர் பிரபாகரன், ராஜாமுகம்மது, கயல்விழி, அன்னலட்சுமி ஆகிய ஐந்து பேரை பரமக்குடி போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் மேலும் சில முக்கிய பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும், எனவே இவ்வழக்கை உடனே சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியிருந்தார். அத்துடன் இக்கோரிக்கையை வலியுறுத்தி பரமக்குடியில் கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.