
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை எரிக்க முயன்ற அதிமுகவினர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாஜகவில் இருந்து விலகிய அக்கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணி, மற்றும் ஐடி விங்க் நிர்வாகிகள் அதிமுகவில் சேர்ந்ததால் அதிமுக - பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமில்லாமல் அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியது அதிமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜகவினர் எரித்ததற்குப் பதிலடி தரும் விதமாக அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள அதிமுகவினர் அதிமுக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் ரவி தலைமையில் இன்று மதியம் கூடி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படத்தை தீ வைத்து எரிக்க முயற்சி செய்தனர்.
அண்ணாமலை ஒழிக என முழக்கங்களை எழுப்பியவாறு வந்த நிலையில் அவர்களைத் தடுத்து நிறுத்திய மீன்சுருட்டி காவல் துறையினர் அண்ணாமலையின் உருவப்படத்தை கைப்பற்றி சுமார் 25-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.