எதிர்தரப்பைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது: ஓபிஎஸ் தரப்பிடம் உறுதியாகச் சொன்ன உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம் எதிர்தரப்பைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது: ஓபிஎஸ் தரப்பிடம் உறுதியாகச் சொன்ன உயர்நீதிமன்றம்

அதிமுக பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் மீதான விசாரணை மார்ச் 17-ம் தேதிக்கு  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு கூட்டியது செல்லும் என தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளில்  ஜூலை 11-ல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தலையிடவில்லை என்றும், சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமே முடிவெடுக்கும் எனவும் தெளிவுபடுத்தி இருந்தனர்.

இந்நிலையில், ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வான பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு  இன்று விசாரணைக்கு வந்தது. மனோஜ் பாண்டியன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதில், கட்சியிலிருந்து நீக்கியது என்பது கட்சிக் கட்டுப்பாடுகளை மீறிய செயல் என்றும்,  பொதுக்குழுவின் முடிவுகள் கட்சி நிறுவனர் எம்.ஜி ஆரின் கொள்கைகளுக்கு விரோதமானது என்றும், அதனால் ஜூலை 11-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் செயல்படத் தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வாதிட்டார்.

தங்களை நீக்குவது தொடர்பான எந்த அஜெண்டாவும் பொதுக்குழுவில் இல்லை என்றும், இயற்கை நீதிக்கு எதிராக தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு நிலுவையில் தான் உள்ளதாகவும், உச்சநீதிமன்றம் பிப்ரவரி 23-ல் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே, நீக்கத்தை எதிர்த்து இந்த உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கட்சி விதிகளின்படி, கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டால், உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமே தவிர, அவர்களை நீக்க பொதுக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் குரு கிருஷ்ணகுமார் வாதிட்டார்.

அப்போது அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் ஆஜராகி கடந்த 9 மாதங்களாக இதே வாதங்களைத்தான் ஓ பி.எஸ். தரப்பினர் முன்வைப்பதாகவும், இந்த வழக்கில் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்கவும், பதிலளிக்கவும் 2 வார கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

ஆனால் இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம் கட்சி விதிகளுக்கு புறம்பானது என்று கூறியதுடன், பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலையும் அறிவிக்க உள்ளதாக மனோஜ் பாண்டியன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க இயலாத நிலை உள்ளதாலும், தீர்மானங்கள் மீது தடை விதிக்க வேண்டும் என மனோஜ் பாண்டியன் தரப்பில் வாதிடப்பட்டது. 

இதனையடுத்து வழக்கில் எதிர்மனுதாரர்கள் தரப்பு விளக்கங்களை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதி, வழக்கு குறித்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி  உள்ளிட்டோர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை, மார்ச் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in