இலவச மின்சாரத்திற்கு இந்த ஆண்டு கூடுதலாக 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

இலவச மின்சாரத்திற்கு இந்த ஆண்டு கூடுதலாக 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

இலவச மின்சாரத்திற்கு இந்த ஆண்டு 4 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ஆய்வு செய்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சென்னையைப் பொறுத்தவரையில் 18 இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது , பின்னர் அவை சரிசெய்யப்பட்டு சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம் திருவெண்காடு பகுதில் மின் விநியோகம் இரண்டு மணிநேரம் தடைபட்டது தற்போது அவை சரி செய்யப்பட்டுள்ளது.

கொஞ்சம் மழை பெய்தாலே மின் விநியோகத்தை நிறுத்தும் சூழல் கடந்த காலங்களில் இருந்தது , ஆனால் தற்போது மின் விநியோகம் நிறுத்தவில்லை. பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில்," "சென்னையில் மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் 3,700-க்கும் மேற்பட்ட பில்லர் பாக்ஸ்கள் 1 மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில், பெருநகர் மாநகராட்சி நிர்வாகம் எந்த இடத்திலும் மழைநீர் தேங்காமல் இருக்க மிகச் சிறப்பாக நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கமான புகார்கள் மட்டுமே மின்னகத்தில் வந்துள்ளது. மின்வெட்டு குறித்த புகார்கள் இல்லை. 11200 மெகாவாட் அளவுக்கு தான் நேற்று மின் தேவை ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் என்பதால் மின் தேவை குறைந்துள்ளது. கூடுதல் செலவு காரணங்களால் அனல் மின் நிலைய உற்பத்திகுறைக்கப்பட்டுள்ளது. 100 நாட்களுக்குள் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.. இலவச மின்சாரத்திற்காக கடந்த 9048 கோடி மானியம் அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக 4 ஆயிரம் கோடி மானியம் அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மழைக்காலங்களில் பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in