
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் பாஜகவில் இருந்து நடிகை விஜயசாந்தி அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் நாளை(நவ.17) காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார்.
தெலங்கானாவில் நவ.30-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 119 தொகுதிகளை உள்ளடக்கிய தெலங்கானாவில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் இணைந்து பாஜக தேர்தலைச் சந்திக்கிறது.
இதற்காக ஜனசேனா கட்சிக்கு 8 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. ஏற்கெனவே 100 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் நடிகை விஜயசாந்திக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு தரவில்லை.
கடந்த 1997-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த விஜயசாந்தி, 2005-ம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். இதன் பின் சந்திரசேகரராவின் டிஆர்எஸ் கட்சியில் இணைந்தார். 2009-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியான விஜயசாந்தி, 2014-ம் ஆண்டு திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இதையடுத்து 2020-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் தெலங்கானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று விஜயசாந்தி நினைத்திருந்தார். ஆனால், அவருக்குப் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்காததால், மனவருத்தத்தில் இருந்தார்.
இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக விஜயசாந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் விஜயசாந்தி நாளை இணைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.