மக்களவைத் தேர்தலில் மாண்டியா மக்களவை தொகுதியில் போட்டியிட மாட்டேன் என்று நடிகை சுமலதா எம்.பி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024-ல் இருந்து விலகிவிட்டேன். அதனால், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரிப்பதாக மாண்டியா தொகுதி மக்களவை தொகுதி உறுப்பினர் நடிகை சுமலதா இன்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தொகுதியில் உள்ள காளிகாம்பா கோயிலில் ஆதரவாளர்கள் கூட்டத்தில் இன்று அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், மாண்டியா மாவட்ட மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு இது. இத்தொகுதி எனது கர்ம பூமி. எனவே, மாண்டியா மக்களவைத் தொகுதியைத் தாண்டி எனது அரசியல் ஒருபோதும் செல்லாது.
வரும் மக்களவை தேர்தலில் மட்டும் நான் போட்டியிடவில்லை. ஏனெனில், மாண்டியா மக்களை என்றென்றும் கைவிட முடியாது. கடந்த தேர்தலில் பாஜக எனக்கு ஆதரவை வழங்கியது. அதேபோல், கடந்த 2023 தேர்தல் பிரசாரத்தில் பாஜகவை ஆதரித்தேன்.
இன்று நான் எம்.பி. ஆனால், நாளை வேறொருவர் என் இடத்தைப் பிடிப்பார். கடைசி வரை நான் அம்பரீஷின் மனைவி என்பதை யாராலும் பறிக்க முடியாது. கடந்த 5 ஆண்டுகளாக எனக்காக கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு இருந்த அனைவரையும் வாழ்த்துகிறேன். நான் கட்சி சார்பற்ற வேட்பாளராக நின்றபோது சவால்கள் மலைப்பாக இருந்தன. ஆனால், மக்கள் என்னை கைவிடவில்லை. 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று 1.25 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மாண்டியா மாவட்ட வாக்காளர்களுக்கு எனது எல்லையற்ற நன்றிகள்.
நான் அரசியலுக்கு வந்தது தற்செயலானது. அரசியல் எனக்கு அவசியமில்லை. இன்றும் அது தேவையில்லை. இருப்பினும், அம்பரீஷ் பல ஆண்டுகளாக அரசியலில் வெற்றி பெற்று வந்தார். ஆனால், அவருடைய ரசிகர்கள் என்னை வந்து போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தியதால், என்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை. அதனால் போட்டியிட்டேன். பல சவால்களுக்கு மத்தியிலும் நான் கட்சி சார்பற்றவளாக போட்டியிட்ட போது இந்த தொகுதி மக்கள் தான் எனக்குத் துணையாக நின்றனர்
மாண்டியா மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். குறிப்பாக கேஆர்எஸ் அணையைப் பாதுகாக்க போராடினேன். என் உயிரை பணயம் வைத்து சட்டவிரோத சுரங்கத்திற்கு எதிராக போராடினேன். பாண்டவபுரா சர்க்கரை ஆலை, குடிநீர், பேருந்து வசதி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பிரச்சினைகள் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளேன் என்றார்.
கடந்த சில மாதங்களாக பாஜக தலைவர்களுடன் நடிகை சுமலதா பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், எதிர் வரும் நாட்களில் சுமலதாவிற்கு உரிய அந்தஸ்து வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமியும் இரண்டு நாட்களுக்கு முன்பு சுமலதாவை சந்தித்து ஆதரவு கோரினார். மேலும், சுமலதாவின் மகன் அபிஷேக் அம்பரீஷின் அரசியல் எதிர்காலத்துக்கு ஒத்துழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இது தொடர்பான முடிவை இன்று (ஏப்ரல் 3) அறிவிப்பேன் என்று சுமலதா கூறியிருந்தார். அதன்படி தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று நடிகை சுமலதா எம்.பி அறிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!
கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!
வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!