என்னை நாக்கை அறுப்பேன் என்று சொன்னார் அண்ணாமலை - காயத்ரி ரகுராம் பகீர் குற்றச்சாட்டு!

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்த பிறகு எப்படி எல்லாம் அசிங்கப்படுத்தலாம் என்று டார்கெட் செய்து என் மேல் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று பாஜக தலைமை மீது நடிகை  காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள  காயத்ரி ரகுராம்  கோடம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

"இடைநீக்கம் செய்யப்பட்ட நேரத்தில் 2 மாதமாக விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் இதுவரை நடத்தவில்லை. கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்த பிறகு எப்படி அசிங்கப்படுத்தலாம் என காரணம் கண்டுபிடிக்கிறார்கள். தொடர்ந்து என்னை டார்கெட் செய்து தாக்குதல் நடத்துகிறார்கள். என்னிடம் எந்த வீடியோவும் ஆடியோவும் இல்லை. அவர்களிடம் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். ஒருவரின் படுக்கை அறையில் கேமராவை வைப்பது எவ்வளவு கேவலமான ஒரு விஷயம். இதை காவல்துறையிடம் ஒப்படைத்து அதை அழிக்க வேண்டியது தானே. கடந்த இரண்டு வருடமாகத்தான் இந்த ஆடியோ, வீடியோ சர்ச்சை உள்ளது. நிறைய பெண்கள் இதனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

150 பேர் முன்னிலையில் என்னை அண்ணாமலை  கேவலப்படுத்தினார்.  திமுக பிரமுகர்களோடு ஒப்பிட்டு பேசினார். ஆனால் நான்  துபாய் போனது இரண்டு பாஜக நிர்வாகிகளோடு. அவர்கள் எனக்கு அண்ணன் தம்பி போன்று. நானும் அண்ணாமலையும் மட்டும் நேரடியாக உட்கார்ந்து பேச வேண்டிய விஷயத்தை 150 பேர் முன்னிலையில் பேசினார்.

அண்ணாமலை தன் மனைவியின்  ஒரு போட்டோவாவது வெளியே காட்டி உள்ளாரா. அவர் மனைவி வெளியே வந்து பொது சேவை செய்துள்ளாரா? ஆனால் நான் ஒரு தனி பெண்ணாக வந்து அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு அண்ணனாக அவர் ஆதரவு தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால், என்னைக் கட்சியில் அனாதையாக விட்டு விட்டார்கள்.

அண்ணாமலை   இன்றுவரை  என்னிடம் நேரடியாக பேசவில்லை. நாக்கை அறுத்து விடுவேன் என்றெல்லாம் பேசினார். என்னுடைய இந்த நிலைக்கு காரணம் நூறு சதவீதம் அண்ணாமலை தான். ஒரு நல்ல தலைவராக இருந்தால் என்னிடம் நேரடியாக அழைத்து பேசியிருப்பார். எட்டு வருடமாக நான் கட்சியில் உழைத்ததற்கு பலன் இல்லாமல் போய்விட்டது. நான் கட்சிக்காக எவ்வளவோ செய்திருக்கிறேன் ஆனால் எதுவுமே செய்யவில்லை என்கிறார்கள்.

கட்சி மோடியால் வளர்ச்சி அடைகிறது. அண்ணாமலையின் கட்சி  செயல்பாடுகள் நன்றாக உள்ளது. தொண்டர்கள், அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை அனைவரும் கடினமாக உழைக்கிறார்கள். அதனால் தான் பாஜக வளர்ச்சி அடைகிறது.

மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன். யாராக இருந்தாலும் எனக்கு ஆதரவாக கை கொடுத்து சுதந்திரம், பாதுகாப்பு கொடுத்தால் அங்கே பணியை தொடர்வேன். அரசியல் பயணத்தை  தனி நபராகவும்கூட  செயல்படுவேன், அல்லது  என்.ஜி.ஓ-வாக கூட செயல்படுவேன்"

இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in