81 கோடியில் மெரினாவில் பேனா நினைவுச்சின்னம்: ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்

நடிகை காயத்ரி ரகுராம்.
நடிகை காயத்ரி ரகுராம்.81 கோடியில் மெரினாவில் பேனா நினைவுச்சின்னம்: ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்

சென்னை மெரினா கடலில் கலைஞர் கருணாநிதியின் நினைவாக அமைக்கப்படும் பேனா நினைவுச்சின்னம் புயல்களால் கூட சேதப்படுத்த முடியாத அளவிற்கு வலுவாக இருக்க வேண்டும் என நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடலில் ரூ.81 கோடி மதிப்பீட்டில் பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு செயதுள்ளது. இந்த நினைவிடத்தில் இருந்து 290 மீட்டர் தூரத்திற்கும், கடற்கரையில் இருந்து 360 மீட்டர் தூரத்திற்கும் என 650 மீட்டர் தொலைவிற்கும் கடலில் பாலம் அமைக்கப்பட உள்ளது. பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களில் பேனா நினைவு சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " பேனா பொதுவானது, பேனா சிலையை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது வெறும் பேனாவாக இருக்கக்கூடாது. அனைவரும் சுற்றுலா பார்வையிடக்கூடிய புதிய ஹாலோகிராபிக் அல்லது லேசர் நிகழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் வரலாற்று பேனாவாக இருக்க வேண்டும். இது சுற்றுலா பயணிகளுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். பேனா என்பது பல விஷயங்களைக் குறிக்கும். பேனா ஒரு சிறந்த கருவியாகும். சிறந்த அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இந்த பேனா ஒரு அரசியல் கட்சிக்குச் சேர்ந்தவையாக இருக்கக்கூடாது. இது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். புயல்களால் கூட சேதப்படுத்த முடியாத இந்த பேனா வலுவாக இருக்க வேண்டும். இந்த பேனா தமிழ்நாட்டு மக்களின் ஜனநாயகக் குரலாக இருக்க வேண்டும்.

பேனாவுக்கு ஏன் பொதுமக்களின் பணம்? இந்த பேனா சிலை வித்தியாசமானதாகவும், ஒரு சுவாரஸ்யமான சுற்றுலா தலமாக இருந்தால், சுற்றுலா மூலம் அரசாங்கம் லாபம் ஈட்டினால் அதை அரசுப் பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கு அல்லது மருத்துவமனைகளுக்கு பயன்படுத்தலாம். அது அரசாங்கத் திட்டத்தைப் பொறுத்தது" கூறப்பட்டுள்ளது. பாஜகவில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம், அக்கட்சி யின் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த நினைவுச்சின்னம்அமைக்க நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு குரல் கொடுத்துள்ள பதிவு, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in