
சென்னையில் மழைநீரை துரிதமாக அகற்றிய தமிழக அரசின் நடவடிக்கையை நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பாராட்டியுள்ளார்.
தமிழகத்தில் அக்.30-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் சென்னை மாநகர மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
இந்த நிலையில் சென்னை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், மழைநீரை அகற்றவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகரும், தேமுதிக தலைவருமான விஜய்காந்த் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் தமிழக அரசுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்து ட்விட்டரில் இன்று ஒரு பதிவை விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். அதில், ‘’ எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியதற்கு இணங்க, சென்னையில் தேங்கிய மழை நீரை துரித நடவடிக்கை மேற்கொண்டு, ராட்சத இயந்திரங்கள் கொண்டு மழைநீரை அகற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.