
அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அக்கட்சி தலைமை அறிவித்து; இதனையடுத்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஈபிஎஸ் முகாமிற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் அணியையும் அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளையும் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் கட்சி கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த அதிகாரம் இல்லை அவ்வாறு பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார்.
அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள் மீண்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அக்கட்சி அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி சந்தித்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல ஒன்றிய செயலாளர்கள் உட்பட பலர் இணைந்து மாவட்டச் செயலாளர் குன்னம் ராமசந்திரனிடம் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்கும்படி வலியுறுத்தியுள்ளனர். அவர் மறுத்த நிலையில் அவர்கள் அனைவரும் அதிமுகவில் இணைந்தனர். இதனால் அனைவரையும் நீக்கி ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.