சி.விஜயபாஸ்கரின் சொத்துகள் முடக்கப்பட்டதற்கு காரணம் இது தான்: ஐகோர்ட்டில் வருமானவரித்துறை பதில் மனுத்தாக்கல்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் செலுத்தாததால் தான் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்துகளும், வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12-ம் ஆண்டு முதல் 2018-19-ம் ஆண்டு வரைக்குமான காலத்திற்கு 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமானவரி அவர் செலுத்த வேண்டியிருந்தது.  வரிபாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை அப்போது நடவடிக்கை எடுத்தது.

இதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில்  நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  வருமான வரித்துறையின் வரி வசூல் அதிகாரி குமார் தீபக் ராஜ் என்பவரின் பதில் மனுவை அத்துறையின் வழக்கறிஞர் ஏ.பி.சீனிவாஸ் தாக்கல் செய்தார்.

அந்த பதில் மனுவில், " 2011-12-ம் ஆண்டிலிருந்து 2018-19 ம் ஆண்டு வரையிலான காலத்துக்கு உரிய வருமான வரியை செலுத்தும்படி உத்தரவு பிறப்பித்த போதும்,  அவர் வரி செலுத்தாததால் சொத்துகளும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

சோதனையின்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இருந்ததால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு நிலுவையில் இருந்ததால், வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் செலுத்தவில்லை என்பதால் சொத்துக்களும், வங்கி கணக்கும் முடக்கப்பட்டன.

விஜயபாஸ்கருக்கு  விளக்கம் அளிக்க வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுத்தான் மதிப்பீட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. சொத்துகளை வேறு யாருக்கும் விற்பதைத் தடுப்பதற்காகவும், அரசின் வருவாய் நலனை பாதுகாக்கவும் சட்டத்திற்குட்பட்டு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் பல்வேறு அமைப்புகளிடம் நிவாரணம் கோருவதன் மூலம் மேல்முறையீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்த மனுதாரர் முயற்சிக்கிறார்.  வரி வசூல் அதிகாரியின் உத்தரவில் தலையிட அவசியமில்லை என்பதால், விஜபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென  அந்த பதில் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருமான வரித்துறையின் பதில் மனுவுக்கு, விஜயபாஸ்கர் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி வழக்கி விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு நீதிபதி அனிதா சுமந்த் தள்ளி வைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in