குறைந்த கொழுப்பு பாலை அதிக விலைக்கு ஆவின் விற்பனை செய்கிறது - அன்புமணி குற்றச்சாட்டு

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

''பேரிடர் காலத்தில் அதிக லாபம் ஈட்டும் நோக்குடன் டிலைட் பாலை ஆவின் நிறுவனம் சந்தையில் திணிப்பது அநீதி. தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் நிறுவனமும் மக்களைச் சுரண்டத் துடிப்பது கண்டிக்கத்தக்கது'' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.

ஆவின் பால்
ஆவின் பால்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மூன்றாவது நாளாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாட்டை போக்கும் விதமாக நபர் ஒருவருக்கு 2 ஆவின் பால் பாக்கெட்டுகள் மட்டும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இயற்கை பேரிடரை பயன்படுத்தி குறைந்த கொழுப்பு பாலை அதிக விலைக்கு விற்பனை செய்து ஆவின் கொள்ளையடிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

நிவாரண உதவி வழங்கிய அன்புமணி ராமதாஸ்
நிவாரண உதவி வழங்கிய அன்புமணி ராமதாஸ்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’பாலுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கொண்டு மக்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.

ஆவின் நிறுவனம் வழக்கமாக விற்பனை செய்யும் நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு உறை பால்களின் உற்பத்தியை மூன்றில் ஒரு பங்குக்கும் கீழ் குறைத்துவிட்டு, அவற்றுக்கு மாறாக குறைந்த கொழுப்பும், அதிக விலையும் கொண்ட டிலைட் பாலை வழக்கத்தைவிட பல மடங்கு கூடுதலாக உற்பத்தி செய்து சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ்

4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பால் ஒரு பாக்கெட் ரூ.24க்கு விற்கப்படுகிறது. ஆவின் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 3.5% மட்டுமே கொழுப்புச் சத்து கொண்ட டிலைட் பாலும் அதே விலைக்கு விற்கப்படுகிறது. பச்சை உறை பாலுக்கான உற்பத்திச் செலவை விட, டிலைட் பால் உற்பத்திக்கான செலவு ஆண்டுக்கு ரூ.840 கோடி குறைவு ஆகும்.

அந்தக் கூடுதல் லாபத்தைக் கருத்தில் கொண்டு தான் டிலைட் பாலை ஆவின் அறிமுகம் செய்திருக்கிறது. அதற்கே மக்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பேரிடர் காலத்தில் அதிக லாபம் ஈட்டும் நோக்குடன் டிலைட் பாலை ஆவின் நிறுவனம் சந்தையில் திணிப்பது அநீதி. தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் நிறுவனமும் மக்களைச் சுரண்டத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

பேரிடர் காலங்களில் மக்கள் மீது அக்கறையும், கருணையும் காட்ட வேண்டிய பொதுத்துறை நிறுவனமான ஆவின், எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்பதற்கிணங்க, மக்கள் வாழவே வழியில்லாமல் தவிக்கும் போது, அவர்களிடம் அதிக லாபத்தை சுரண்ட நினைப்பது தவறு.

ஆவின் நிறுவனம் அது செய்த தவறையும், அதன் பொறுப்பையும் உணர்ந்து கொண்டு, டிலைட் பாலை திணிப்பதை விடுத்து, நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு உறை பால்களை வழக்கமான அளவில் சந்தையில் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in