டெல்லியின் புதிய துணை மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஆலே முகமது இக்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கமல் பாக்ரி தோல்வியடைந்தார்.
இன்று நடைபெற்ற துணை மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஆலே முகமது இக்பால் 147 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கமல் பாக்ரி 116 வாக்குகளைப் பெற்றார். டெல்லி துணை மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக மொத்தம் 265 வாக்குகள் செலுத்தப்பட்டது, அவற்றில் 2 வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் ட்வீட்டில், "டெல்லியின் மாநகராட்சியில் ஆத்மி கட்சியின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆலே முகமது இக்பாலுக்கு வாழ்த்துக்கள். பாஜக, மத்திய அரசு, துணைநிலை ஆளுநர்கூட அரசியலமைப்பிற்கு எதிராக சென்று இதைத் தடுக்க முயன்றனர், ஆனால் டெல்லியின் மக்கள் எங்களை வெற்றிபெற வைத்தார்கள்" என தெரிவித்துள்ளார்
முன்னதாக, இன்று காலையில் நடைபெற்ற தேர்தலில் டெல்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் வெற்றிபெற்றார். அவர் பாஜகவின் ரேகா குப்தாவை 34 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மேயர் தேர்தலில் மொத்தம் பதிவான 266 வாக்குகளில் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகளும், பாஜகவின் ரேகா குப்தா 116 வாக்குகளும் பெற்றனர்.