
’’ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காத காரணத்தால் இடைத்தேர்தலில் போட்டியில்லை’’ என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அமமுகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, களத்தில் பரப்புரை பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அமமுகவிற்கு கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை, இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்கிட இயலாது என தலைமை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
பதிவுச் செய்யப்பட்ட அரசியல் கட்சியான அமமுக பொதுத் தேர்தல் காலங்களில் குக்கர் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், தற்போது இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்க இயலாது என தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில், புதியதோர் சின்னத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால் வருகின்ற நாடாளுமன்றத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் குக்கர் சின்னத்தோடு தேர்தலைச் சந்திப்போம். இந்த இடைத்தேர்தலை தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்பதால் போட்டியில்லை’’ எனக் கூறியுள்ளார்.