நீட் தோல்வியால் உயிரிழந்த மாணவன் ஜெகதீஸின் தந்தை உடலுக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் உதயநிதியிடம்’’ இன்னும் எத்தனை உயிர ஸார் இழக்குறது, உங்களால ஒன்னும் பண்ண முடியாதா’’ என மறைந்த ஜெகதீஸின் நண்பர் ஆவேசமாக கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் , நீட் தேர்வில் 2 முறை தோல்வியடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள், அவருடைய தந்தை செல்வசேகர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.
குரோம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது ஜெகதீஸின் நண்பர் ஃபயாஸ், ‘’எத்தனை ஜெகதீஷ்... எத்தனை அனிதாவை... நாங்கள் இழக்கணும். ஒவ்வொரு முறையும் இதே கோரிக்கைகள் தான், பன்னிரண்டாவது முடித்து விட்டு எதற்கு ஜே. இ.இ போன்ற தேர்வுகள்? அப்புறம் எதுக்கு 12 வது படிக்கிறோம்னே தெரியலை. ஆளுநருக்கு எதிராக உங்களால ஒன்னும் பண்ண முடியாதா?’’ என உதயநிதியை நோக்கி ஆவேசமாக கேள்வி எழுப்பியதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.