
’’ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ரொக்கமாக 51.31 லட்சமும், 11.68 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களும், 1.33 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது’’ என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, ‘’ஈரோடு கிழக்கு தொகுதியில் 688 வழக்குகளில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 547 வழக்குகள் தமிழ்நாடு மதுவிலக்கு தடுப்பு பிரிவில் பதியப்பட்டுள்ளது. 64.34 லட்சம் மதிப்பிலான பொருட்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கமாக 51.31 லட்சமும், 11.68 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களும், 1.33 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
238 வாக்குச்சாவடிகளிலும் வாக்களிப்பதை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் பிரச்சாரம் 25-ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடையும்.
வெளியூர்களில் இருந்து வந்த அனைவரும் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும். 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 1430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபிடி 310 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்குசாவடியில் மட்டும் 1206 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர்’’ என கூறினார்.