முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று சமர்ப்பித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. சசிகலா, ஓபிஎஸ், அப்போலோ மருத்துவர்கள், அதிகாரிகள் உட்பட 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகசாமி ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த சூழலில், ஆணையத்துக்கு தமிழக அரசு அளித்த அவகாசம் கடந்த 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த 23-ம் தேதி இரவு கோவை புறப்பட்டுச் சென்றார். முதல்வரின் சுற்றுப்பயணத்தால் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 600 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி இன்று சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது விரைவில் கூட்டப்படும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.