விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையிலிருந்து 350 சிறப்புப் பேருந்துகள் இயக்க இருப்பதாகத் தமிழக போக்குவரத்துத் துறையின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
விடுமுறை தினங்களில் சென்னையிலிருந்து வெளியூர் செல்வதற்குப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள். குறிப்பாகப் பண்டிகை தினங்களில் ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தமிழக அரசு தெரிவித்தாலும், தொடர்ந்து பேருந்து கட்டண கொள்ளை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கூடுதல் பேருந்துகளைத் தமிழக அரசு இயக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய ஊர்களுக்கு இன்று சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும் விநாயகர் சதுர்த்தியை முடித்துவிட்டு பிற ஊர்களிலிருந்து சென்னை திரும்புவதற்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் முன்பதிவு செய்து டிக்கெட் பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.