திரிபுராவில் விறுவிறு வாக்குப்பதிவு: இதுவரை நடந்த வாக்குப்பதிவு சதவீதம் என்ன?

திரிபுரா வாக்குப்பதிவு
திரிபுரா வாக்குப்பதிவுதிரிபுரா சட்டமன்றத் தேர்தல்

திரிபுரா சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தத் தேர்தலில் பாஜக-ஐபிஎஃப்டி கூட்டணி, சிபிஎம்-காங்கிரஸ் கூட்டணி மற்றும் திப்ரா மோதா ஆகியவை முக்கியப் போட்டியாளர்களாக உள்ளனர்.

திரிபுராவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் காலை 11 மணி வரை சுமார் 31.2 சதவீதம் பேர் தங்கள் வாக்களித்துள்ளனர். 60 உறுப்பினர்களைக் கொண்ட திரிபுரா சட்டசபைக்கு சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கிடே கிரண்குமார் தினகரோ தெரிவித்தார்.

திரிபுராவில் உள்ள 3,337 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அவற்றில் 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 28 மிகவும் பதற்றமானவை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது பாஜகவின் முதல்வராக மாணிக் சாஹா உள்ளார். இந்த தேர்தலில் பாஜக 55 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி கட்சி (ஐபிஎப்டி) 6 இடங்களிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் சிபிஎம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 43 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும், இதர கூட்டணி கட்சிகள் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து 2019-ல் பிரிந்து மாநிலக் கட்சியாக வளர்ந்து வரும் திப்ரா மோதா கட்சியும் 42 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. அதேசமயம், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இங்கே தனியாக 28 தொகுதிகளில் களம் காண்கிறது. இதனால் 4 முனை போட்டியில் திரிபுரா தேர்தல் களம் சூடுபறக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in