
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் என 262 பிரபலங்கள் கடிதம் எழுதி இருக்கின்றனர்.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி டிங்கரா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோபால் கிருஷ்ணா மற்றும் நாடு முழுவதும் உள்ள மூத்த எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், சினிமா கலைஞர்கள், பாடகர்கள் என்று 262 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இன்று கையெழுத்திட்டு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கடந்த 2022ல் ஜாகிர் அப்துல்லா வசந்த் யூனியன் ஆப் இந்தியா என்ற வழக்கில் ஒருவர் சமுதாயத்தில் பதற்றத்தையும், பிரிவினையும் ஏற்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார் என்றால் சம்பந்தப்பட்ட அரசு புகார் வரவேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருக்காமல் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யலாம். காவல்துறைக்கும் அதற்கான அதிகாரம் இருக்கிறது என்றும் தீர்ப்பளித்திருக்கிறது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், தமிழ்நாடு அரசும், தமிழக காவல்துறையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்சநீதிமன்ற வழக்கில் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும். எனவே அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அந்த கடிதத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. நாட்டின் மிகப் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அமைந்திருக்கிறது என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.