2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். இதனால், ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தங்களிடம் இருந்த நோட்டுகளை மாற்ற வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் வரிசையில் நின்ற பல பேர் உயிரிழந்தனர். இந்த வேதனை மறைவதற்குள் தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதேநேரத்தில், கடந்த 2018-19-ம் ஆண்டில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனிடையே, பொதுமக்களிடம் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன் படி, வரும் 23-ம் தேதி முதல், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள ஆர்.பி.ஐ. கூறியிருக்கிறது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் மே 23-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கை மேலும் பொதுமக்களை வேதனை அடையவைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை கடுமையாக கண்டித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள். கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்'' என்று குற்றம்சாட்டியுள்ளார்.