`சேத மதிப்பின் ஒரு பகுதியை தருகிறோம்'- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

`சேத மதிப்பின் ஒரு பகுதியை தருகிறோம்'- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 14 பேருக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 14 பேர் மீது ராயப்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின் பேரில் கலவரத்தை தூண்டுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், பாசறை பாலசந்திரன் உட்பட 14 பேர் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதி கோதண்டராஜன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதமதிப்பின் ஒரு பகுதியை தாங்கள் தரத் தயாராக இருப்பதாக தெரிவிக்கபட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாமீன் வழங்கினால் மீண்டும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் ஜாமீன் வழங்க கூடாது என ஆட்சேபனை தெரிவித்தார்.

இதையடுத்து மனுதாரர்கள் அனைவரும் 15 நாட்களுக்கு பொன்னேரி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in