காலை 9 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 12.55 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்பம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் வெயில் அதிகரிக்கும் முன்பே வாக்களிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு படை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 12.55 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு, ”தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 15.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 8.59 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது” என தெரிவித்தார்.
தூத்துக்குடியில் 11.62 சதவீதம், கோவையில் 12.16 சதவீதம், திருப்பூரில் 13.13 சதவீதம், நீலகிரியில் 12.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வடசென்னையில் 9.73 சதவீதமும், மத்திய சென்னையில் 8.59 சதவீதமும், தென் சென்னையில் 10.08 சதவீதமும், திருவள்ளூரில் 12.31 சதவீதமும், காஞ்சிபுரத்தில் 12.25 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.