அதிமுகவில் ஒரே நாளில் 12 நிர்வாகிகளை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான்கரை ஆண்டுகளாக இணைந்த கைகளாக செயல்பட்டு வந்த ஓபிஎஸ்- ஈபிஎஸ்ஸை பிரித்துவிட்டது ஒற்றைத்தலைமை. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வருபவர்களை ஓபிஎஸ்சும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமியும் அதிரடியாக நீக்கி வருகின்றனர். ஓபிஎஸ்ஸால் நீக்கப்படும் நிர்வாகிகள் பெரும்பாலானவை எடப்பாடி ஆதரவாளர்கள்தான். அதே நேரத்தில் ஈபிஎஸ்ஸின் செயல்பாடு பிடிக்காமல் அதிமுக நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ் பக்கம் வரத் தொடங்கிவிட்டனர். அவர்களை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் 12 நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார் ஈபிஎஸ். "கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கும் மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரை உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட கழக முன்னாள் செயலாளர் வி.கோவிந்தராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட புரட்சித்தலைவி பேரவை துணைச் செயலாளர் ஜே.கே.வெங்கடாசலம், கிருஷ்ணகிரி ஒன்றிய கழக முன்னாள் செயலாளர் சி.கோவிந்தராஜ்,
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை துணை தலைவர் அ.விஜயபார்த்திபன், மாவட்ட கழக இணைச் செயலாளர் கண்ணகி குப்புசாமி, அரியலூர் தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் சுரேஷ்குமார், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த வேடசந்தூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ப.சுப்பிரமணி, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் கே.சீனிராஜ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கருப்பூர் சீனி என்ற ராஜாகோபால், மாவட்ட இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் துறையூர் கே.கணேஷ்பாண்டியன், கயத்தார் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் டி.வினோபாஜி ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது" என்று கேட்டுக்கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.