
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மாலை பெங்களூரில் தனது ஆதரவு எம் எல் ஏக்களுடன் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் கடந்த 4 ஆண்டுகளாக இருக்கும் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டுமென கடந்த ஓர் ஆண்டாக மூத்த தலைவர்கள் மேலிடத்தில் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களாகவே கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு புதிய தலைவர் யார் என்கிற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
புதிய தலைவராக செல்வபெருந்தகை அல்லது சசிகாந்த் செந்தில் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை கே.எஸ்.அழகிரி இன்று சந்திக்கிறார்.
பெங்களூருவில் இன்று மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. கே.எஸ்.அழகிரியுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களும் பெங்களூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் கே.எஸ்.அழகிரியே மாநில தலைவராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மூத்தத் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.