திருச்சி லால்குடியில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ள தேர்தல் பறக்கும் படையினர், ஐஜேகே நிர்வாகியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்திய ஜனநாயக கட்சியின் கிளைச் செயலாளராக திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த வினோத் சந்திரன் என்பவர் பதவி வகித்து வருகிறார்.
இவர் அந்த பகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து வருவதாக லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் செழியன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வினோத் சந்திரன் வீட்டில் பணம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் சந்தேகத்தின் பேரில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 1 லட்சம் ரூபாய் பணம், வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் ‘பாரிவேந்தரின் மக்களவைத் தொகுதி பணிகள்’ என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட 500 புத்தகங்கள், 100 துண்டுப் பிரசுரங்கள் ஆகியவை இருந்தன. இவற்றை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அதனை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வினோத் சந்திரனிடம் விசாரணை நடத்திய போது, “கழிவறையில் இருந்த பணம் என்னுடையது அல்ல” என்று அவர் கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!
புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!
தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!
நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!