உதகையில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள்: படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

உதகையில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள்: படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

உதகை ரோஜா பூங்காவில் 17-வது ரோஜா காட்சி இன்று தொடங்கியது. இதை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் விஜயநகரத்தில் ரோஜா பூங்கா 11 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு முதல் இந்த பூங்காவில் நீலகிரி தோட்டக்கலைத்துறை மற்றும் ரோஜா சங்கம் சார்பில் ரோஜா காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு 17-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கண்காட்சியை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

இந்தக் கண்காட்சியின் சிறப்பம்சமாக சுமார் 31 ஆயிரம் வண்ண ரோஜாக்களைக் கொண்டு 15 அடி உயரத்தில் மரவீடு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளைக் கவரும் விதமாக கார்ட்டூன் கதாபாத்திர வடிவமான மோட்டு- பட்லு, மான், ப்யானோ மற்றும் பனிமனிதன் போன்ற வடிவங்களும், தமிழ்நாடு அரசின் புதிய திட்டமான மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அனைவரும் கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த மஞ்சப்பை போன்ற வடிவங்களும் சுமார் 50 ஆயிரம் ரோஜாக்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இக்காட்சியில் இதர மாவட்டங்களான திருநெல்வேலி, திருப்பூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்ட தோட்டக்கலைத் துறையினரால் ரோஜா மலர்களைக் கொண்டு வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இக்காட்சியில் சுற்றுலாப் பயணிகள் குதூகலிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இன்று துவங்கிய ரோஜா கண்காட்சி நாளையும் நடைபெறுகிறது. எழில் கொஞ்சும் ரோஜா கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in