டாஸ்மாக் விற்பனையில் மும்முரம்.... பள்ளி குழந்தைகளின் விவகாரத்தில் மெத்தனம்... அரசு மீது விஜயகாந்த் புகார்
தெருக்கள் தோறும் மதுக்கடைகள் திறப்பதை விடுத்து குழந்தைகளின் படிப்பில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தென்காசி மாவட்டம் வி. கே.புதூர் தாலுகாவில் அமைந்துள்ள அச்சங்குன்றம் என்ற கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லாததால் சுமார் 200 குழந்தைகளுடைய படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பள்ளிக்கூடம் இல்லதாதால் கோயிலிலும், கல்யாண மண்டபத்திலும் வைத்து குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும், அக்குழந்தைகளுக்கு மதிய உணவும் அந்த ஊர் மக்களே வழங்குகிறார்கள்.
அத்துடன் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று கூடி பள்ளி கட்டுவதற்கு இடம் ஒதுக்கி கொடுத்தும், மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அம்பில் மகேஷ் ஆகியோரிடம் பள்ளி கட்ட அனுமதி மட்டும் கேட்டு மனு அளித்தும் இன்னும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதோடு, தெருவுக்கு தெரு டாஸ்மாக் மற்றும், அதிநவீன பார்கள், மற்றும், டெட்ரா பேக்குகளில் மது விற்பனை செய்தல், கூடவே, வெளிநாட்டிலிருந்தும் வரும் மதுபானங்களுக்கு விலை உயர்த்துதல் என தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றுவதற்கும், டாஸ்மாக் விற்பனை செய்வதிலும் மும்முரம் காட்டும் தமிழக அரசு, பள்ளி குழந்தைகளின் விவகாரத்தில் மெத்தனம் காட்டுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வி. கே. புதூர் தாலுகாவில் அமைந்துள்ள, அச்சங்குன்றம் கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்ட அனுமதி அளிக்க வேண்டும். பல்வேறு பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றிய திமுக அரசு, குழந்தைகளின் படிப்பு விவகாரத்தில் உரிய தீர்வு காண வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.