
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை அடுத்து நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் வாகனங்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுகின்றன.
'கள ஆய்வில் முதல்வர்' திட்டத்தின்கீழ் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறைமலை நகரில் இரண்டு நாட்களாக நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெருங்குடி சுங்கச்சாவடியில் சாலை பயன்பாட்டு கட்டணம் வசூலிப்பது, இந்த அரசு பதவி ஏற்றவுடன், கைவிடப்பட்டது என்றார்.
இப்பகுதி வழியாக செல்வோர், தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிவோர் என பல்வேறு தரப்பினர் பெரும் பயனடைந்தனர். இந்த சாலையில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் விரைவாக நடந்து வருவதால், சாலையின் பல பகுதிகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே சாலையில் நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று இன்று முதல் நாவலூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும், இதனால் மக்கள் பயனடைவார்கள் என்று கூறினார். அதன் அடிப்படையில் இன்று முதல் நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.