
இன்று ஆடி கிருத்திகை தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஆலயங்களில் அதிகாலை முதலே பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், குற்றாலத்தில் வார நாளான இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் அருவிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து சென்ற வண்ணம் உள்ளனர்.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பொய்த்து போனதின் காரணமாக அருவிக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திரண்டுவந்து நீண்ட வரிசையில் நின்று குளித்து சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை இல்லாத நிலை நீடித்து வருவதால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்த அளவு கொட்டுகிறது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகாலை முதலே அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இங்குள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. மழை இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வருவதால் அருவிகளுக்கு வனப்பகுதியில் இருந்து வரும் நீரின் அளவும் வெகுவாக குறைந்தது.
சுற்றுலாப் பயணிகள் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் உள்ள பாலருவி மற்றும் அச்சன்கோவில், பாலாறு, கும்பாஉருட்டி அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு திரண்டு சென்ற வண்ணம் உள்ளனர். குற்றாலம் பேரருவியில் குறைவாகவே தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளிக்க காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வெயிலின் தாக்கமும் காலை முதலே அதிகரித்து காணப்படுகிறது.