இன்று டிசம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை முழுவதும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும், எந்த இடத்திற்கும் மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தினம் கடந்த டிசம்பர் 3-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அன்று முழுவதும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு (பேடிஎம், வாட்ஸ்அப், போன்பே முறையை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் ரூ.5 என்ற சலுகை கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக அன்று இச்சலுகையை பொதுமக்களால் பயன்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், இந்த கட்டண சலுகை இன்று டிசம்பர் 17-ம் தேதி மீண்டும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பயன்படுத்தி ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ ரயிலில் மக்கள் பயணம் செய்யலாம். மக்களின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச் சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேக சலுகை வழங்கப்படுகிறது. எனவே, மக்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.