
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்களிடம் போலி நுழைவுச் சீட்டு விற்பனை செய்து வந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புகழ்பெற்ற பவானி அம்மன் ஆலயம் ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14 வாரங்கள் விழாக் கோலம் பூண்டிருக்கும். அந்த வகையில் கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பக்தர் ஒருவர் கொண்டு வந்த நுழைவுச் சீட்டை கோவில் ஊழியர்கள் சோதனையிட்டனர்.
அதில், அந்த நுழைவுச் சீட்டு கோவில் நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது, விரைவாக தரிசனம் செய்ய 5 பேர் கொண்ட குழுவினர் சிறப்பு நுழைவுச் சீட்டை 1000 ரூபாய்க்கு கொடுத்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து கோவில் செயல் அலுவலர் மற்றும் கோவில் ஊழியர்கள் போலி நுழைவுச் சீட்டை விற்பனை செய்த நபரை தேடிச் சென்ற போது அவர் பவானி அம்மன் கோவிலில் பணியாற்றிய முன்னாள் ஒப்பந்த ஊழியர் அருண்பாண்டியன் என்பது தெரிய வந்தது.
கோவில் செயல் அலுவலர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் அந்த நபர் போலி நுழைவுச் சீட்டை விற்பனை செய்தது உறுதியானது. கோவிலில் தற்போது பணியாற்றும் இருவர் அதற்கு உதவி செய்துள்ளனர்.
இதனையடுத்து முன்னாள் ஒப்பந்த ஊழியர் அருண்பாண்டியன் (28), கோவிலில் தற்போது பணியாற்றி வரும் காவலாளிகள் வினோத் (33), தினகரன் (47) ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.