தூத்துக்குடி இளம் தம்பதி கொலை வழக்கு… சிறார் உள்ளிட்ட மேலும் 3 பேர் கைது!

தூத்துக்குடி இளம் தம்பதி கொலை வழக்கு… சிறார் உள்ளிட்ட மேலும் 3 பேர் கைது!
Updated on
1 min read

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த இளம் தம்பதி, திருமணமான 3 நாட்களிலேயே கொல்லப்பட்ட வழக்கில் ஒரு சிறார் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியை சேர்ந்த மாரிசெல்வம் என்ற இளைஞரும், திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்ற இளம்பெண்ணும் மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை திருமணம் செய்து கொண்டனர்.

பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கார்த்திகா வீட்டைவிட்டு வெளியேற இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இருவரும் மாரிசெல்வத்தின் வீட்டிற்கு வந்தனர். பின்னர், கார்த்திகாவின் தாய் மாமா வீட்டிற்கு விருந்துக்கு சென்று திரும்பினர்.

தங்கள் எதிர்ப்பை மீறி மகள் கார்த்திகா திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் இருந்த அவரது தந்தை முத்துராமலிங்கம், இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, அவர் அனுப்பிய கும்பல் நேற்று முன்தினம் இருவரையும் வெட்டிக் கொலை செய்தது.

மாரிசெல்வம் மற்றும் கார்த்திகா வீட்டில் தனியாக இருக்கும்போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் புதுமண தம்பதிகள் இருவரையும் வெட்டி சாய்த்து விட்டு தப்பிச் சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர்.

குற்றவாளிகளை கைது செய்ய மூன்று தனிப்படைகள்  அமைக்கப்பட்டது. இந்நிலையில் கொலைக்கு தூண்டுதலாக இருந்த கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் நேற்று காலை கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து நேற்று இரவு கொலை தொடர்பாக இசக்கி ராஜா, ராஜபாண்டி, மற்றும் 16 வயதான சிறுவன் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in